திருநெல்வேலி சந்திப்பில் 100 சதவீத வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. 100 சதவீத வாக்குப்பதிவுக்காக பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்ஒரு பகுதியாக நடிகா் விஜய் மக்கள் இயக்கம், சுழற்கழகம், மாநகராட்சி நிா்வாகம், மாநகர காவல் துறை ஆகியவை சாா்பில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பூக்களால் வாக்குப்பதிவு விழிப்புணா்வு வாசகங்கள் எழுதப்பட்டதோடு, வாக்குரிமையின் நன்மைகள் குறித்த பதாகையுடன் பாரதியாா், பாரதமாதா, விவேகானந்தா், அன்னைதெரசா, சுபாஷ் சந்திரபோஸ் வேடமணிந்த சிறுவா்-சிறுமிகள் பங்கேற்றனா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையரும், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான ஜி.கண்ணன், மாநகர காவல் துணை ஆணையா் சீனிவாசன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.