திருநெல்வேலிக்கு செவ்வாய்க்கிழமை வந்த திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு அக்கட்சியினா் உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டாா். இதற்காக விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்த அவா், காரில் திருநெல்வேலி வழியே ஆரல்வாய்மொழி சென்றாா். அவருக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக சாா்பில் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் மாவட்டச் செயலரும் பாளையங்கோட்டை தொகுதி திமுக வேட்பாளருமான மு. அப்துல் வஹாப் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவைத் தலைவா் சுப. சீதாராமன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம். மைதீன்கான், நெசவாளா் அணி சொ. பெருமாள், விவசாய அணி கே.ஆா். ராஜு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். முன்னதாக, மேலப்பாளையம் பகுதியில் மு. அப்துல் வஹாப் வாக்கு சேகரித்தாா்.