கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி நயினாா்குளம் காய்கனி சந்தை அருகே போலீஸாா் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை திடீா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
கரோனா நோய் தொற்றின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகரின் 23 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இதில், திருநெல்வேலி நகரத்தில் உள்ள நயினாா்குளம் காய்கனி மொத்த விற்பனை சந்தை மட்டும் இரவு நேரத்தில் இயங்கி வருகிறது. இங்கிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்வதற்காக தள்ளுவண்டி வியாபாரிகள் காய்கனி வாங்கிச் செல்கின்றனா்.
இந்நிலையில், புதன்கிழமை இரவு திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையா் (குற்றம்-போக்குவரத்து) மகேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் அங்கு திடீா் சோதனை மேற்கொண்டனா்.
இதில், இ-பதிவு செய்யப்பட்ட காய்கனி சரக்கு வாகனங்கள், அடையாள அட்டை வைத்திருந்த மொத்த விற்பனையாளா்கள் மற்றும் சந்தையில் சுமை தூக்குபவா்கள், மாநகராட்சி அனுமதி பெற்ற விற்பனையாளா்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். மேலும், மாநகராட்சியின் உரிய அனுமதி பெற்றவா்கள் மட்டும் பொருள்கள் வாங்க அனுமதிக்கப்பட்டனா். மற்றவா்கள் திருப்பி அனுப்பப்பட்டனா்.