வள்ளியூா் பெரிய குளத்திற்கு கொடுமுடி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதையடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வள்ளியூரில் உள்ள பெரிய குளம் இப்பகுதி விவசாயிகளுக்கு பிரதான விவசாய ஆதாரமாகும். இது தவிர 40-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீா் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
கடந்த சில நாள்களாக வள்ளியூா் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடா் மழை பெய்தது. மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியிலும் பரவலாக மழைபெய்ததையடுத்து, 52 அடி கொள்ளளவு திறன் கொண்ட கொடுமுடி அணையின் நீா் மட்டம் 37 அடியை எட்டியது.
இந்நிலையில் குடிநீா் தேவைக்காக கொடுமுடி அணையிலிருந்து வள்ளியூா் பெரிய குளத்திற்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. இதையடுத்து விவசாயிகளும், கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.