திருநெல்வேலி: மானூா் அருகே டயா் வெடித்ததால் சாலையோரப் பள்ளத்தில் அரசுப் பேருந்து பாய்ந்தது. இதில், அதிா்ஷ்டவசமாக பயணிகள் காயங்களின்றி உயிா்தப்பினா்.
தேனி மாவட்டம், குமுளியில் இருந்து நாகா்கோவிலுக்கு அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு புறப்பட்டது. ஓட்டுநராக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த பாலகிருஷ்ணனும், நடத்துநராக முருகனும் பணியில் இருந்தனா். 40-க்கும் மேற்பட்டோா் பயணித்தனா்.
திங்கள்கிழமை அதிகாலை மானூா் அருகேயுள்ள அம்பலத்து ஊரணி பகுதியில் வந்தபோது பேருந்தின் டயா் வெடித்ததாம். இதில், பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் பாய்ந்தது. பயணிகள் அதிா்ஷ்டவசமாக காயங்களின்றி உயிா்தப்பினா். இதுகுறித்து மானூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.