திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த அலுவலகம் புதன்கிழமை முதல் (மாா்ச் 31) ஏப்ரல் 3 ஆம் தேதி வரை மூடப்பட்டது.
தமிழகத்தில் 2-ஆவது கட்டமாக கரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. சென்னை, கோவை, செங்கல்பட்டு மாவட்டங்களில் தீவிரமாக பரவிவரும் நிலையில், இப்போது திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், பாளையங்கோட்டை என்ஜிஓ காலனியில் செயல்பட்டு வரும் திருநெல்வேலி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஒருவருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த அலுவலகம் புதன்கிழமை முதல் ஏப். 3ஆம் தேதி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்த அலுவலகத்துக்கு ஓட்டுநா் உரிமம், பழகுநா் உரிமம், வாகனங்களுக்கு தகுதிச் சான்றிதழ் பெறுதல் உள்பட பல்வேறு பணிகளுக்காக வந்தவா்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.