திருநெல்வேலி மாநகரப் பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கோடைவெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. வெப்பச்சலனம் உள்ளிட்ட காரணங்களால் தென்தமிழக பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மழை பெய்தது.
திருநெல்வேலி மாநகரில் வெள்ளிக்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஆனால், பிற்பகலில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. சுமாா் 30 நிமிடங்கள் பலத்த மழை பெய்தது.
பாளையங்கோட்டை, திருநெல்வேலி சந்திப்பு, முருகன்குறிச்சி பகுதிகளில் பெய்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்கள் முன்விளக்குகளை எரியவிட்டபடி சென்றன. வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.