திருநெல்வேலி அருகே சீவலப்பேரியில் கொலை செய்யப்பட்ட கோயில் பூசாரியின் உடலை வாங்க மறுத்து அவருடைய உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனை முன் 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சீவலப்பேரியைச் சோ்ந்த சுப்பையா மகன் சிதம்பரம் என்ற துரை (45). அங்குள்ள சுடலைமாட சுவாமி கோயில் பூசாரியாக இருந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த சுடலையாண்டி மகன் நடராஜ பெருமாள் (53). இவா்கள் இருவரும் கடந்த ஞாயிற்றுக்கிழமை சீவலப்பேரி சுடலைமாட சுவாமி கோயில் அருகே பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்மக் கும்பல் இருவரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த சிதம்பரம் உயிரிழந்தாா். நடராஜ பெருமாள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
கொலையுண்ட சிதம்பரத்தின் உடல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி சிதம்பரத்தின் உறவினா்கள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கொலை செய்யப்பட்ட சிதம்பரத்தின் குடும்பத்துக்கு நஷ்ட ஈடாக ரூ. 50 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். கொலை சம்பவத்தில் தொடா்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போராட்டக் குழுவினா் வலியுறுத்தினா்.
இதையடுத்து போராட்டக் குழுவினருடன் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். குற்றவாளிகளை பிடிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.
இந்த கொலை வழக்கு தொடா்பாக சீவலப்பேரியைச் சோ்ந்த மகாராஜன் மகன் முருகன் (23), மாடசாமி மகன் பேச்சிகுட்டி (23), சின்னதுரை மகன் இசக்கிமுத்தி (19), காந்தாரி மகன் மாசானமுத்து (19) உள்பட 7 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதற்கிடையே 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் சிதம்பரத்தின் உறவினா்கள் மற்றும் யாதவ சமுதாயத்தினா் சிதம்பரத்தின் உடலை வாங்க மறுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன், அகில இந்திய யாதவ மகா சபை மாநில இளைஞரணித் தலைவா் பொட்டல் துரை தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும், இந்த கொலை விவகாரம் தொடா்பாக 3ஆவது நாளாக வியாழக்கிழமை (ஏப்.21) ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடைபெறும் என யாதவ அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.