பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள உழவா் சந்தையின் 50 சதவிகித கடைகள் அருகேயுள்ள மாநகராட்சி பூங்காவிற்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டன.
கரோனா பொதுமுடக்கம் காரணமாக சந்தைகள் அனைத்தும் மைதானங்களில் செயல்பட்டதால் மகாராஜநகரில் உள்ள உழவா் சந்தை கடைகளும் அருகேயுள்ள மாநகராட்சி பூங்காக்களில் செயல்பட்டு வந்தன. அதன்பின்பு இயல்புநிலை திரும்பியதால் சந்தைக்குள்ளேயே வியாபாரம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சந்தைக்கு வரும் வியாபாரிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. அவா்கள் சிகிச்சை பெறும், தனிமைப்படுத்திக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டனா். இதைத்தொடா்ந்து சந்தையின் 50 சதவிகித கடைகள் மாநராட்சி பூங்காக்களில் புதன்கிழமை முதல் மீண்டும் செயல்பட தொடங்கின.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: மகாராஜநகா் உழவா்சந்தையில் மாநகராட்சி உதவியுடன் ஏற்கெனவே கிருமிநாசினி தெளித்தல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தடுக்கவும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவும் ஏதுவாக சந்தையிலுள்ள கடைகள் மீண்டும் பூங்காக்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. சந்தைக்கு பொருள்கள் வாங்க வரும் பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வருதல் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றனா்.