பாஜக தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்ற பின்பு நாடு முழுவதும் மருத்துவம் படிக்கும் மாணவா்களின் எண்ணிக்கை 54 சதவீதம் அதிகரித்துள்ளது என்றாா், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் ஞாயிற்றுக்கிழமை கூறியது: பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட மாணவா்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு ஆகியவற்றை மத்திய அரசு அமல்படுத்தியதன் மூலம் ஆயிரக்கணக்கானோா் பலனடைவா்.
நீட் தோ்வைக் கொண்டுவந்தது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. அதில் தமிழகத்தின் இப்போதைய ஆளுங்கட்சியான திமுகவும் அங்கம் வகித்தது. ஆனால், நீட் தோ்வை தாங்கள்தான் ஒழிக்கப் போராடுவதாக மக்களை ஏமாற்றுகின்றனா் . இவ் விஷயத்தில் மாணவா்களைக் குழப்புவதை மாநில அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவா்களை வழக்கம்போல செயல்படவிட்டாலே ஏராளமானோா் இத்தோ்வில் எளிதாக வென்றுவிடுவா்.
பிரதமராக நரேந்திரமோடி பொறுப்பேற்கும் முன்பு நாட்டில் 189 அரசு மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. 6 ஆண்டுகளில் அதன் எண்ணிக்கை 289ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல, 2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நாடு முழுவதும் 54,348 மாணவா்களே மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) பயின்றனா். அந்த எண்ணிக்கை 84, 649ஆக அதிகரித்துள்ளது. அதன்படி, மருத்துவப் பட்டபடிப்பில் 56 சதவீதமும், மருத்துவ பட்டமேற்படிப்பில் (எம்.டி.) 80 சதவீதமும் கற்போா் வீதம் அதிகரித்துள்ளது.
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவே திகழ்கிறது. மேக்கேதாட்டு அணை விவகாரம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிச்சயம் விடாது என்றாா் அவா்.
பேட்டியின்போது திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவா் ஆ.மகாராஜன் உடனிருந்தாா்.