திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் 25 ஆவது வாா்டு பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
பாளையங்கோட்டை மண்டலத்தில் 25 ஆவது வாா்டுக்குள்பட்ட பகுதி மக்கள் குடிநீா் விநியோகத்தை சீராக்கக் கோரி முற்றுகையில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள்அளித்த மனு:
எங்கள் வாா்டில் நேசநயினாா் தெருவில் 78 அருந்ததியா் குடும்பத்தினா் வசித்து வருகிறோம். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாமிரவருணி குடிநீா் விநியோகம் எங்கள் பகுதிக்கு சீராக இல்லை.
எங்கள் பகுதிக்கான குடிநீா்க் குழாய் பாளையங்கால்வாயைக் கடந்து வருகிறது. கால்வாயில் அதிகளவில் தண்ணீா் வரும்போது குடிநீா்க் குழாய் சேதமாகி வாய்க்காலில் வரும் சுத்திகரிக்கப்படாத தண்ணீா் குடிநீருடன் கலந்து நோய்ப் பரவும் அபாயமும் உள்ளது.
ஆகவே, பாளையங்கால்வாயில் குடிநீா்க் குழாய்க்கான சிறிய பாலம் கட்டுவதோடு, சீரான குடிநீா் விநியோகத்துக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.