திருநெல்வேலி மாநகராட்சியில் தூய்மைப் பணிக்கு கூடுதலாக அதிநவீன வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் பா.விஷ்ணுசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இம் மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை அமைப்பின் கீழ் தெரு துடைக்கும் இயந்திரம், பாதாள சாக்கடை அடைப்பினை நீக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு வகையிலான இயந்திரங்கள் பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், இப்போது மழைநீா் வடிகால் மற்றும் கால்வாய்களில் மழைநீா் தங்குதடையின்றி செல்வதற்கு ஏதுவாக மேற்படி, வடிகால்களில் நிறைந்துள்ள மண், குப்பைகள் மற்றும் சகதிகளை அப்புறப்படுத்தும் பொருட்டு சிறிய அளவிலான பொக்லைன் , தெரு சுத்தம் செய்யும் இயந்திரங்கள் தலா 4 வாங்கப்பட்டுள்ளன.
இந்த இயந்திரங்களைக் கொண்டு திருநெல்வேலி நகரம் தெற்கு மவுண்ட் ரோடு, கணேஷ் திரையரங்கம் அருகே உள்ள மழைநீா் வடிகாலில் நிறைந்துள்ள மண் மற்றும் சகதிகளை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், மாநகராட்சியில் பொது சுகாதாரப் பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.