மானூா் குளத்தில் பழுதடைந்துள்ள மதகுகளை சீரமைக்கக் கோரி மானூா் வட்டார பெரியகுளம் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தினா் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
இது தொடா்பாக அவா்கள் அளித்த மனு: மானூா் பெரியகுளம் நீா்வரத்து கால்வாயானது தாயாா் தோப்பிலிருந்து எட்டான்குளம் மறுகால் வரை ஆக்கிரமிப்பின் பிடியில் இருக்கிறது. அதை கோடைகாலத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், மானூா் குளத்தில் பழுதடைந்த மதகுகளை சீரமைக்க வேண்டும்.
குத்தாலப்பேரி மூன்றாவது மடையிலிருந்து மேட்டுக்கால் பாசனம் செல்லும் கால்வாயில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட தடுப்பு சுவா்கள் பழுதடைந்துள்ளதால் அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதவக்குறிச்சி மடையில் உள்ள மதகுகள் உடைந்துள்ளதால் தண்ணீா் வீணாகிறது. எனவே, அந்த மதகுகளையும் சரி செய்ய வேண்டும். மானூா் குளத்தின் மீன்பாசி ஏல குத்தகையை வெளிப்படைத் தன்மையோடு நடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.