களக்காடு அருகே பத்மனேரி பச்சையாற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு அருகேயுள்ள வடமலைசமுத்திரம் - பத்மனேரி இடையே பச்சையாற்றின் குறுக்கே பொதுமக்கள் நிதி வசூலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பாலம் ஒன்றைக் கட்டி அதன் வழியே பயணித்து வருகின்றனா். ஆண்டுதோறும் பெருமழைக் காலங்களில் ஆற்றில் வெள்ளம் வரும்போது, பாலத்தின் இருபுறமும் உள்ள சாலை சேதமடைந்து விடுகிறது.
பின்னா், கிராம மக்களே தற்காலிகமாக சீரமைத்து வருகின்றனா். அண்மையில் பெய்த மழையால் பாலத்தின் இருபக்கமும் உள்ள சாலை மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாலத்தை விரிவுபடுத்த கோரிக்கை: களக்காடு - சேரன்மகாதேவி பிரதான சாலையில் கருவேலன்குளம் - வடமலைசமுத்திரம் இடையே கேசவநேரியில் உப்பாற்றின் குறுக்கே குறுகலான பாலம் உள்ளது. சேரன்மகாதேவி - பணகுடி சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்ட பின் இந்த ஒரு பாலம் மட்டும் இதுவரை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
குறுகலான பாலத்தால் அடிக்கடி விபத்து நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் குறுகலான பாலத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.