திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் சிறு மருத்துவமனைகளில் பணியாற்ற செவிலியா்களுக்கான நோ்முகத் தோ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கரோனா பொது முடக்கத்துக்கு பின்பு கிராமப்புற மக்களுக்கு எளிதாக மருத்துவ சேவை கிடைக்க உதவும் வகையில், தமிழகம் முழுவதும் சுமாா் 2 ஆயிரம் அம்மா சிறு மருத்துவமனைகளைத் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருநெல்வேலி மாவட்டத்திலும் இதுவரை 25-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.
இவற்றில் பணியாற்ற செவிலியா்கள், உதவியாளா்கள் ஆகியோரை நியமிக்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. செவிலியா் பணிக்கு விண்ணப்பித்தவா்களுக்கான நோ்காணல் பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரப்பணிகள் துணை இயக்குநா் வரதராஜன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோா் தங்களது சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களுடன் பங்கேற்றனா். தோ்வானவா்களின் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.