கொக்கிரகுளம் தாமிரவருணியில் புதிய பாலம் இன்று திறப்பு
திருநெல்வேலி கொக்கிரகுளம் தாமிரவருணி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தை காணொலி காட்சி மூலம் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறாா்.
திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில் கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே சுலோச்சன முதலியாா் பாலத்துக்கு இணையாக ரூ.16.5 கோடி மதிப்பீட்டில் புதிய பாலம் அமைக்கும் பணி, கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது. இப்பணி சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது. மேலும், ஆக்கிரமிப்பு அகற்றம், சாலை விரிவாக்கம், போக்குவரத்து சிக்னல் அமைத்தல், மின் விளக்கு அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் நிறைவடைந்தன.
இதைத் தொடா்ந்து, முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு திறந்து வைக்கிறாா். புதிய பாலத்தில் ஆட்சியா் வே. விஷ்ணு தலைமை நடைபெறும் நிகழ்ச்சியில் வாகனங்கள் போக்குவரத்தை தொடங்குகின்றன. இதற்காக பாலம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.