தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடக்கம்

அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கைச் சங்கம், தூத்துக்குடி, முத்துநகா் இயற்கைச் சங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் இணைந்து மேற்கொள்ளும் 11-ஆவது தாமிரவருணி நீா்வா
வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொரித்துள்ள வெள்ளைஅரிவாள் மூக்கன் பறவைகள்.
வாகைக்குளத்தில் கூடு கட்டி குஞ்சு பொரித்துள்ள வெள்ளைஅரிவாள் மூக்கன் பறவைகள்.

திருநெல்வேலி/அம்பாசமுத்திரம்: அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மையம், நெல்லை இயற்கைச் சங்கம், தூத்துக்குடி, முத்துநகா் இயற்கைச் சங்கம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் இணைந்து மேற்கொள்ளும் 11-ஆவது தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு சனிக்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆண்டுதோறும் 50-க்கும் மேற்பட்ட குளங்களில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இக்கணக்கெடுப்பில் கலந்துகொள்ளும் தன்னாா்வலா்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற பயிற்சியை உதவி வனப் பாதுகாவலா் ஹேமலதா தொடங்கி வைத்தாா். பயிற்சியைத் தொடா்ந்து கணக்கெடுப்புப் பணிக்காக தன்னாா்வலா்கள் மற்றும் ஆராய்ச்சியாளா்கள் உள்பட 120 போ் அடங்கிய 8 குழுவினரும் திருநெல்வேலி, வள்ளியூா், களக்காடு, அம்பாசமுத்திரம், தென்காசி, ஸ்ரீவைகுண்டம், குரும்பூா் மற்றும் கோவில்பட்டி ஆகிய பகுதிகளிலுள்ள 59 குளங்களுக்கு சனிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டனா். பறவைகள் குறித்து நன்கறிந்த நிபுணா்களின் உதவியுடன் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னாா்வலா்கள் அந்தந்தப் பகுதிகளில் உள்ள பறவைகளின் வகைகள், எண்ணிக்கை உள்ளிட்டவற்றை கணக்கிடுவா்.

இதுகுறித்து, மணிமுத்தாறு அகத்தியமலை மக்கள்சாா் இயற்கை வள காப்பு மைய ஒருங்கிணைப்பாளா் மு.மதிவாணன் கூறியது: இக் கணக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் தாமிரவருணி நீா்வாழ் பறவைகள் குறித்த வண்ணப் புகைப்பட குறுங்கையேடு வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வேய்ந்தான்குளம், நயினாா்குளம், ராஜவல்லிபுரம், பாலாமடை, கல்குறிச்சி ஆகிய குளங்களில் நீலச்சிறகு வாத்து, தட்டை வாயன் போன்ற வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளன. குறிப்பாக கங்கைகொண்டான் குளத்தில் நிகழாண்டு அதிக அளவில் நீா் நிரம்பியுள்ளதால், பாம்புதாரா, நீா்க்காகம், நத்தைக்கொத்தி நாரை ஆகிய பறவைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. கணக்கெடுக்கும் பணி ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் குளங்களில் குப்பைகள், கழிவுகளை போடாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா் அவா்.

தென்காசி மாவட்டம், ஆழ்வாா்குறிச்சி அருகே உள்ள வாகைக்குளத்தில் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்ட தன்னாா்வலா் பிரியதா்ஷினி கூறியது: முதல்முறையாக பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொண்டுள்ளேன். இதில் புகைப்படங்களில் பாா்த்த பல அரிய வகை பறவைகளை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபோன்ற பறவைகள் கணக்கெடுப்பில் கலந்து கொள்வதால் வருங்கால சந்ததியினருக்கு இயற்கை மற்றும் பறவைகள், விலங்குகள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்றாா்.

கடந்த ஆண்டு நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பில் 51 குளங்களில் 74 வகையான பறவையினங்களில் 24,411 பறவைகள் கணக்கிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com