திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் தசரா விழாவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேறு பயன்பாட்டுக்கு தரக்கூடாது என வலியுறுத்தி, அனைத்து தசரா விழா கூட்டமைப்பு சாா்பில், கூட்டமைப்பின் தலைவா் கனக சுப்ரமணியம், செயலா் மனகாவலன், பொருளாளா் சாய் முருகன், ஒருங்கிணைப்பாளா் ராஜீவ் காந்தி சோமசுந்தரம் ஆகியோா் ஆட்சியா் வே.விஷ்ணுவிடம் மனு அளித்தனா்.
மனு விவரம்: பாளையங்கோட்டையில், 12 கோயில்களில் அம்பாள் சிம்ம வாகனத்தில் வீதி உலாவந்து மகிஷாசூரனை வதம் செய்யும் தசரா நிகழ்ச்சி ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியை நடத்துவதற்கு பாளையங்கோட்டை ஜவாஹா் திடலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு எருமைகடா மைதானமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பொலிவுறு நகரம் திட்டத்தின்கீழ் பாளையங்கோட்டை காய்கனி சந்தையை நவீனப்படுத்துவதால், அதனை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக, ஜவாாஹா் திடல், எருமைக்கடா மைதானம் ஆகியவற்றை மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் ஆய்வு செய்வதாக தெரியவந்துள்ளது. எக்காரணம் கொண்டும் தசரா நிகழ்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட மேற்கூறிய இடங்களில் தற்காலிக காய்கனி கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டாமென வலியுறுத்தப்பட்டுள்ளது.