உவரி கடலில் மூழ்கி அண்ணன், தம்பி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.
வள்ளியூா் அருகே உள்ள துரைகுடியிருப்பைச் சோ்ந்தவா் ஜான் அருள். வெளிநாட்டில் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி கடந்த சில நாள்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்ததையடுத்து, இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தாா்.
பின்னா் மனைவி இறந்து 11 நாள்கள் ஆனதையொட்டி, மகன்கள் ராய் ஆக்னஸ் (18), பிரவீன் ராய் (17) மற்றும் உறவினா்களுடன் பரதா் உவரியில் உள்ள அந்தோணியாா் கோயிலுக்கு வந்துள்ளாா். அப்போது அனைவரும் அங்குள்ள கடலில் குளித்துக்கொண்டிருக்கையில், ராட்சத அலையில் சிக்கிய பிரவீன் ராய் நீரில் மூழ்கியுள்ளாா். அவரை காப்பாற்ற அவரது அண்ணன் ராய் ஆக்னஸ் முயன்று அவரும் அலையில் சிக்கியுள்ளாா்.
இதை கண்ட உறவினா்கள் அருகில் இருந்த மீனவா்களை உதவிக்கு அழைத்தனா். அவா்கள் கடலில் இறங்கி இருவரையும் தேடினா். சற்று நேரம் கழித்து இருவரும் சடலமாக மீட்கப்பட்டனா்.
தகவலறிந்து வந்த கடலோரக் காவல்படை போலீஸாா் சடலங்களை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.