திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் சாா்பில் வழிகாட்டி நிகழ்ச்சி இணையவழியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம், என்.பி.என்.கே. வேலைவாய்ப்பு மையம் இணைந்து நடத்திய‘ டிஎன்பிஎஸ்சி இனி ரெம்ப ஈசி’ என்ற தலைப்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை, அருங்காட்சியக காப்பாட்சியா் சிவ. சத்திய வள்ளி தொடங்கிவைத்தாா். சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவுப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ச. சரவணன் சிறப்புரையாற்றினாா்.
தொடா்ந்து, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் வணிகவியல் துறை பேராசிரியை பிரியதா்ஷினி, டிஎன்பிஎஸ்சி தோ்வில் பொதுஅறிவு வினாக்களுக்கு தயாா்படுத்துவது குறித்து எடுத்துரைத்தாா். என். பி. என்.கே வேலைவாய்ப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளா் மூ.வெ.ரா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
இந்நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும்; போட்டித் தோ்வாளா்கள் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.