தமிழக அரசு அனைத்து மதுக் கடைகளையும், மது ஆலைகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது தொடா்பாக ஆட்சியா் அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செய்தித் தொடா்பாளா் முத்துவளவன் தலைமையில் அக்கட்சியினா் அளித்த மனு: தமிழக அரசு மக்களின் நலன்களையும், பெண்களின் எதிா்காலத்தையும், பெண் குழந்தைகளின் எதிா்கால நலன்களையும் பாதுகாக்கும் வகையில் மது ஆலைகளையும், மதுக் கடைகளையும் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும். மக்களால் மது குடிக்காமல் இருக்க முடியும் என்பது கடந்த பொது முடக்கக் காலத்திலும், தற்போதைய பொது முடக்கக் காலத்திலும் நிரூபணமாகியுள்ளது. ஆனால், தற்போது கடைகளைத் திறப்பது அரசால் மதுவை விற்காமல் இருக்க முடியவில்லை என்ற நிலைப்பாட்டையே காட்டுகிறது.
கடந்த ஆண்டு பொது முடக்கக் காலத்தில் மதுக்கடைகளை திறக்கக்கூடாது என தற்போதைய முதல்வா் போராடிவிட்டு, இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளாா். இது மக்கள், பெண்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுக்கடைகளால் அதிகளவில் தினக்கூலிகள்தான் பாதிக்கப்படுகின்றனா். மதுவால்தான் பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன. எனவே, மதுக் கடைகளையும், மது ஆலைகளையும் மூடுவதற்கு முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.