திருநெல்வேலி மாவட்டத்தில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனா்.
கோடைக்காலம் தொடங்கும் முன்பாக மாா்ச் இறுதி வாரத்திலேயே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் அதிகமான வெப்பம் பதிவாகியது. கடும் வெப்பம் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகியுள்ளனா். பகல் வேளைகளில் மக்கள் வெயிலுக்கு அஞ்சி வெளியே வரத் தயங்குகின்றனா். இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோா் எனப் பலரும் வாய்ப்புண் உள்ளிட்ட வெப்ப நோய்களால் அவதிப்பட்டுவருகின்றனா்.
பதநீா், இளநீா், தா்ப்பூசணி, பழச்சாறு, கரும்புச்சாறு விற்பனை அதிகரித்துள்ளது. சுரண்டை, தென்காசி, கடையம், கடையநல்லூா் பகுதிகளிலிருந்து திருநெல்வேலிக்கு இளநீா் அதிகளவில் விற்பனைக்காக கொண்டுவரப்படுகின்றன. இவை ரூ. 25 முதல் ரூ. 50 வரையும், கன்னியாகுமரி மாவட்டங்களிலிருந்து இறக்குமதியாகும் செவ்விளநீா் ரூ. 40 முதல் ரூ. 60 வரையும் விற்கப்படுகின்றன.