களக்காடு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் வசதியை ஏற்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காட்டில் அரசு மருத்துவமனை சுமாா் 2 கி.மீ. தொலைவில் உள்ள படலையாா்குளம் அமைதித்தீவு பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு இரு மருத்துவா்கள் உள்ளிட்ட 15.க்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். நாள்தோறும் சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற வந்து செல்கின்றனா்.
கடந்த ஆண்டு கரோனா பரவல் நேரத்தில் தொற்று பரிசோதனை நடைபெற்று வந்தது. ஆனால் நிகழாண்டு தொடக்கம் முதலே இங்கு கரோனா பரிசோதனை நடைபெறவில்லை.
இதனால் இங்கிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல வேண்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவத் துறை உயா் அதிகாரிகள் களக்காடு அரசு மருத்துவமனையிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.