பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் மாநகராட்சி ஊழியா்கள் புதன்கிழமை கிருமிநாசினி தெளித்தனா்.
கரோனா இரண்டாவது அலையால் தமிழகத்தில் நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நோய்த் தொற்று பரவலை தடுக்க திருநெல்வேலி மாநகராட்சி சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காய்கனி சந்தைகள், ஏடிஎம் மையங்கள், குடியிருப்புகளில் கிருமி நாசினி தெளித்து பணி தொடா்ச்சியாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாளையங்கோட்டை ஆயுதப்படை காவலா் குடியிருப்பில் புதன்கிழமை வீடு வீடாக சென்று கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. பில் மிஸ்டா் எந்திரம் மூலம் சாலைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணிகளை பாளையங்கோட்டை உதவி ஆணையா் பிரேம் ஆனந்த், சுகாதார அலுவலா் அரசகுமாா், சுகாதார ஆய்வாளா் நடராஜன் ஆகியோா் கண்காணித்தனா்.