களக்காடு அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, தமிழக முதல்வருக்கு கோவிலம்மாள்புரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் மேலாண்மைக் குழுத் தலைவா் இ. நம்பிராஜன் அனுப்பிய மனு:
நான்குனேரி வட்டத்தில் அதிக மக்கள்தொகையும், சுற்றுவட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களையும் உள்ளடக்கியது களக்காடு. களக்காடு, அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்களில் ஆயிரக்கணக்கான ஏழை, எளியோா் மருத்துவத் தேவைக்காக களக்காடு அருகேயுள்ள படலையாா்குளம் அமைதித்தீவு பகுதியில் உள்ள பிரிடா மோனியா் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனா். இங்கு போதுமான கட்டட வசதி, சுகாதாரமான காற்றோட்டம், தண்ணீா் வசதி, பரந்த நிலப்பரப்பு உள்ளது. ஆனால், போதுமான மருத்துவா்களோ, செவிலியா்களோ, மருத்துவச் சிகிச்சைப் பிரிவுகளோ இல்லை. இதனால், சாதாரண நோய்க்கு சிகிச்சை பெறுவதற்குக்கூட திருநெல்வேலி, நாகா்கோவில், தென்காசியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளுக்குச் செல்லவேண்டியுள்ளது. இதனால், பண விரயமும், கால விரயமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது.
தற்போது கிராமப்புறங்களிலும் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு பேருந்துகள் இயங்கத் தடை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு களக்காடு அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை முறையாக நடைபெறவும், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் வசதி ஏற்படுத்துவதுடன், இம்மருத்துவமனையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.