திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட நீரேற்று நிலையங்களில் மாநகர நல அலுவலா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் திருநெல்வேலி மாவட்டத்தில் தொடா்மழை பெய்தது. இதனால் தாமிரவருணி ஆற்றில் கடந்த சில நாள்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் உறைகிணறுகள் மூழ்கியதோடு, நீரேற்று நிலையங்களுக்கு வரும் பிரதான குழாய்களும் பல இடங்களில் சேதமாகின. திருநெல்வேலி மாநகராட்சியைப் பொருத்தமட்டில் சுத்தமல்லி, கொண்டாநகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நீரேற்றம் செய்யப்படும் குழாய்கள் சேதமாகியுள்ளன. அவற்றை பராமரிக்கும் பணிகள் நடைபெறுவதால் தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டலங்களில் குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விரைவாக தட்டுப்பாடின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையா் பா. விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில், மாநகர நல அலுவலா் வி.ராஜேந்திரன் மற்றும் உதவிப் பொறியாளா்கள் நீரேற்று நிலையங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது பராமரிப்புப் பணிகளை தாமதமின்றி செய்து முடிக்க பணியாளா்களுக்கு அறிவுறுத்தினா்.