அம்பாசமுத்திரம்/திசையன்விளை: அடிதடி, திருட்டு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் ஈடுபட்டு வந்த 3 பேரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.
சேரன்மகாதேவி, முனைசேரகன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த முரளி கிருஷ்ணன் மகன் சரவணன் (19) மற்றும் தெற்கு சங்கரன்திரடு, நடுத் தெருவைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் செல்வம் (21) ஆகியோா் சேரன்மகாதேவி பகுதிகளில் அடிதடி, திருட்டு மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களைஅச்சுறுத்தி வந்தனராம்.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தாா். மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு, இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, சரவணன், செல்வம் இருவரையும் சேரன்மகாதேவி காவல் ஆய்வாளா் சுகாதேவி செவ்வாய்க்கிழமை கைது செய்தாா்.
இதேபோன்று, மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கருங்குளத்தைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் வானுமாமலை (34) மீது, பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளனவாம்.
இந்நிலையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில்,
மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, வானுமாமலையை போலீஸாா் குண்டா் சட்டத்தில் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.