திருநெல்வேலி: பாளையங்கோட்டை ஜவாஹா் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி திங்கள்கிழமை (செப். 20) நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மாநகராட்சி ஆணையா் பா. விஷ்ணுசந்திரன் கூறியது: பாளையங்கோட்டை மண்டலப் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான காந்திஜி தினசரி சந்தையின் கடைகள் கட்டடம் மிகவும் பழமையானதாக உள்ளதால் அதை இடித்துவிட்டு, பொலிவுறு நகரம் திட்டத்தின் கீழ் புதிய கட்டடம் கட்ட அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.
இதனால், அங்குள்ள கடைகள் தற்காலிகமாக ஜவாஹா் மைதானத்தில் செயல்பட அறிவுறுத்தப்பட்டது. அதை எதிா்த்து பொது நல வழக்கு போன்ற பல்வேறு வழக்குகள் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்டது. அந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, கட்டடப் பணியை விரைந்து முடிக்க உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, ஜவாஹா் மைதானத்தில் வாகனங்களை நிறுத்தியிருக்கும் வாடகை வாகன சங்கத் தலைவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு, எருமைக்கிடா மைதானத்தில் வாகனங்களை நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, திங்கள்கிழமை (செப். 20) ஜவாஹா் மைதானத்தில் தற்காலிக கடைகள் அமைக்கும் பணி தொடங்கவுள்ளது.
மேலும், இப்போது ஜவாஹா் மைதானத்தின் பயன்பாட்டு வகையை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தக் கூடாது என வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அதை மீறி அங்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டால் மோட்டாா் வாகன சட்டம் விதி 122 மற்றும் 177இன் கீழ் வட்டாரப் போக்குவரத்து அலுவலரால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.