திருநெல்வேலி: திருநெல்வேலி மத்திய மாவட்ட மகளிா் அணி சாா்பில் உள்ளாட்சித் தோ்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட மகளிரணி அமைப்பாளா் மகேஸ்வரி செந்தில் தலைமை வகித்தாா். மகளிரணி மாநகர அமைப்பாளா் சௌந்திரம் முத்துராஜ், முன்னாள் எம்.பி. வசந்திமுருகேசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
திருநெல்வேலி மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட மானூா் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தோ்தலில் மகளிரணி சாா்பில் தீவிர பிரசாரம் செய்வது, திமுக ஆட்சியில் மானூா் பகுதியில் செய்யப்பட்ட திட்டங்கள், முதல்வா் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு செயல்படுத்தப்படும் மகளிருக்கான இலவச பேருந்து பயண சலுகை, கரோனா நிவாரண நிதி உள்ளிட்ட மக்கள் நலத் திட்டங்களின் பயன்கள் குறித்து மகளிரணியினா் வீடுவீடாகச் சென்று எடுத்துக்கூறுவது, அனைத்து வாா்டுகளில் திமுகவின் உதயசூரியன் சின்னம் வெற்றிபெற பாடுபடுவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.