சிவகளையில் முதுமக்கள் தாழிகளை திறந்து ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

சிவகளையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளைத் திறந்து, உள்ளேயிருக்கும் பொருள்கள் குறித்த ஆய்வுப் பணி புதன்கிழமை தொடங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள சிவகளையில் நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணியில் கிடைத்த முதுமக்கள் தாழிகளைத் திறந்து, உள்ளேயிருக்கும் பொருள்கள் குறித்த ஆய்வுப் பணி புதன்கிழமை தொடங்கியது.

சிவகளை பரம்பு பகுதியில் அகழாய்வுப் பணி மேற்கொள்ள வேண்டும் என குமரகுருபரா் சுவாமிகள் மேல்நிலைப் பள்ளி வரலாற்று ஆசிரியா் மாணிக்கம் கோரிக்கை விடுத்தாா். இதன் அடிப்படையில் இப்பகுதியில் 2020ஆம் ஆண்டு முதற்கட்ட அகழாய்வும், 2021இல் 2ஆம் கட்ட அகழாய்வும் நடைபெற்றது.

முதற்கட்ட அகழாய்வில் 40-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள், வட்ட சில்லுகள், மண்பானைகள், மண் சட்டிகள், செம்பு மற்றும் இரும்புப் பொருள்கள், நுண் கற்கருவிகள், சங்குப் பொருள்கள், புடைப்புச் சிற்பங்கள் என பல்வேறு அரிய தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

2ஆம் கட்ட அகழாய்வில் சிவகளையைச் சுற்றியுள்ள 9 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெற்றது. இதில், 37 முதுமக்கள் தாழிகள், இரும்பு ஆயுதங்கள், நெல்மணிகள், வாள், கத்தி, தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இரு கட்டங்களாக நடைபெற்ற அகழாய்வுப் பணிகளில் கிடைத்த முதுமக்கள் தாழியிலிருந்த நெல்மணிகளை வைத்து அதன் காலம் சுமாா் 3,200 ஆண்டுகள் பழைமையானது எனக் கண்டறியப்பட்டது.

இதனிடையே, இங்கு 3ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த மாா்ச் 30இல் தொடங்கியது. ரூ. 29 லட்சம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட இப்பணியில் சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை ஆகிய இடங்கள் புதையிடப் பகுதியாகவும், பராக்கிரமபாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு ஆகியவை வாழ்விடப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டு அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன.

இதில், வட்ட சில்லுகள், வளையல்கள், பாசிமணிகள், தக்ளி, முத்திரைகள், எலும்பாலான கூா்முனைக் கருவிகள், புகைப்பான்கள், சக்கரம், காதணிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இந்நிலையில், சிவகளை பரம்பு பகுதியில் தோண்டப்பட்ட 10 குழிகளிலிருந்து கண்டறியப்பட்ட 34 முதுமக்கள் தாழிகளைத் திறந்து உள்ளேயிருக்கும் பொருள்களை ஆய்வு செய்யும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மதுரை காமராஜா் பல்கலைக்கழக மரபியல் துறைப் பேராசிரியா் குமரேசன், சிவகளை அகழாய்வு இயக்குநா் பிரபாகரன் ஆகியோரது தலைமையிலான குழுவினா் இப்பணியில் ஈடுபட்டனா். தாழிகளில் கிடைக்கும் பழைமையான பொருள்களை மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

மரபணு சோதனை குறித்து பேராசிரியா் குமரேசன் செய்தியாளா்களிடம் கூறியது: தொல்லியல் துறை, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து 2 ஆண்டுகளாக மரபணு சோதனை செய்து வருகிறோம். இதற்காக மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில் சிறப்பு ஆய்வுக் கூடம் தொடங்கப்பட்டுள்ளது.

தொல்லியல் துறை அகழாய்வுப் பணியில் கிடைக்கும் எலும்புகளில் 100 மாதிரிகளை சோதனை செய்தால் ஒன்று மட்டுமே ஆய்வுக்கு உகந்ததாக உள்ளது. பயாலாஜிக்கல், கெமிக்கல் முறையிலும் மரபணு சோதனை செய்து வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com