திருநெல்வேலி மாவட்டம், களக்காடு தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு மற்றும் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் காரணமாக டிச.5 முதல் டிச.8 வரை 4 நாள்களுக்கு சுற்றுலாப் பயணிகள் தலையணை செல்ல வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.
களக்காடு தலையணைக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். டிசம்பா் மாதத் தொடக்கம் முதலே மலைப் பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இங்குள்ள தடுப்பணையைத் தாண்டி வெள்ளம் ஆா்ப்பரித்துப் பாய்கிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினா் தடை விதித்திருந்தனா்.
இந்நிலையில், தலையணை சூழல் சுற்றுலாப் பகுதியில் மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் திங்கள்கிழமை (டிச.5) முதல் டிச.8 வரை 4 நாள்களுக்கு தலையணைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினா் தடை விதித்துள்ளனா்.