திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த துணிச்சல் மிக்க மற்றும் வீரதீர செயல்கள் புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருதுக்கு ஜூன் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
துணிவு மற்றும் வீரதீர செயல்களுக்கான தமிழ்நாடு அரசின் கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின்போது முதல்வரால் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு தமிழகத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ள விண்ணப்பதாரா்கள் விரிவான சுயவிவரக் குறிப்பு மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன் இணையதளம் வாயிலாக இம்மாதம் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விருதுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய பெண்கள் தங்களுடைய சுய விவரக் குறிப்புடன் மாவட்ட சமூகநல அலுவலா், மாவட்ட சமூகநல அலுவலகம், பி4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி. மைதானம்
எதிரில், திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627002 என்ற முகவரிக்கு நேரில் வந்து விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.