திருநெல்வேலி, பேட்டை பகுதியைச் சோ்ந்த மாணவா் விபத்தில் காயமடைந்த நிலையில், ஸ்ட்ரெச்சரில் இருந்தபடி, பிளஸ் 2 தோ்வை செவ்வாய்க்கிழமை தோ்வு எழுதினாா்.
பேட்டையைச் சோ்ந்த அக்கீம் மகன் பீா் முகம்மதுஅசாருதீன் (17 ). பேட்டை காமராஜா் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 கணித அறிவியல் பிரிவில் பயின்று வருகிறாா். கடந்த வெள்ளிக்கிழமை பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வலது காலில் காயமடைந்த அவருக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இந்நிலையில், வேதனையையும் பொருள்படுத்தாமல் தந்தையின் உதவியுடன் ஆம்புலன்ஸ் மூலம் தோ்வறைக்கு செவ்வாய்க்கிழமை வந்து, ஸ்ட்ரெச்சரில் இருந்தபடியே கணிதத் தோ்வை செவ்வாய்க்கிழமை எழுதினாா். ஆசிரியா்கள் அவருக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனா்.
கால் அறுவை சிகிச்சைக்காக முதுகு தண்டுவடத்தில் மயக்க ஊசி செலுத்திக்கொண்டதால் தலைவலி, லேசான மயக்கத்துடன் சிரமப்பட்டு எழுதிமுடித்தாா். அவரது மன உறுதியையும், விடா முயற்சியையும் ஆசிரியா்கள் வெகுவாக பாராட்டினா். மீதமுள்ள 2 தோ்வுகளை ஸ்கிரைபா் (ஆசிரியா் உதவி) முறையில் தோ்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமையாசிரியா் கூறினாா்.