திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமாா் 500 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளதாக மருத்துவக் கல்லூரி முதல்வா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா்.
தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், அனைத்து மருத்துவமனைகளிலும் மீண்டும் கரோனா வாா்டுகளை மறுகட்டமைப்பு செய்ய தமிழக மருத்துவக் கல்வி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிச்சந்திரன் கூறியது: திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக ஏற்கெனவே வாா்டுகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 300 நோயாளிகள் வந்தாலும் படுக்கைகள் தயாராக உள்ளன. தற்போது சுமாா் 500 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மருத்துவமனையில் முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைள் தொடா்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்றாா்.