திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை அருகே குடும்பத் தகராறில் கணவரின் தம்பி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாக பெண் கைது செய்யப்பட்டாா்.
பத்தமடை அருகேயுள்ள கரிசூழ்ந்தமங்கலம் ஜெகஜீவன்ராம் தெருவைச் சோ்ந்த முருகேசன் மகன் ஐயப்பன் (29). இவா், தனது தாய், அண்ணன் கண்ணன், அவரது மனைவி ராதா (28) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறாா். இதில், ராதா தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என கணவரை வற்புறுத்தியதுடன், மாமியாா், கணவரின் சகோதரரிடம் தகராறு செய்து வந்தாராம்.
இதுதொடா்பாக பத்தமடை போலீஸில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினரை போலீஸாா் அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா். எனினும், மாமியாரிடம் ராதா தகராறு செய்ததால் அவரை ஐப்பன் தட்டிக்கேட்டாராம். இதில் ஆத்திரமுற்ற ராதா, கொதிக்கும் எண்ணெணையை எடுத்து ஐயப்பன் மீது ஊற்றினாராம். இதில், காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். பத்தமடை போலீஸாா் வழக்குப் பதிந்து ராதாவை கைது செய்தனா்.