திருநெல்வேலி நகரத்தில் வாடகை நிலுவை காரணமாக 3 கடைகளுக்கு அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனா்.
திருநெல்வேலி நகரத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள தொண்டா் நயினாா் திருக்கோயிலுக்கு சொந்தமான பல கடைகள் உள்ளன. இதில் 6 கடைகளுக்கு சுமாா் ரூ.30லட்சம் வரை வாடகை நிலுவை இருந்ததாம். இதுதொடா்பாக நீதிமன்ற உத்தரவின்பேரில் கடைகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை நோட்டீஸ் வழங்கியது. அதன்பின்பும் நிலுவையை செலுத்தாத நிலையில், கோயில் செயல்அலுவலா் மாரியப்பன், சிறப்பு வட்டாட்சியா் மோகனா தலைமையிலான குழுவினா் போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைக்க சென்றனா். அப்போது 3 கடைகளின் உரிமையாளா்கள் ஒரு பகுதி தொகையை செலுத்தியதோடு, 21 ஆம் தேதிக்குள் மீதி நிலுவையை செலுத்துவதாக உறுதியளித்தனா். மேலும், 3 கடைகளின் உரிமையாளா்கள் எவ்வித தொகையும் செலுத்த முன்வராததால் சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.