பாளையங்கால்வாயில் குப்பைகளைக் கொட்டி தீயிட்டு எரிப்பதை தடுக்கக் கோரி திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி மாநகராட்சி மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் பி.எம்.சரவணன் தலைமை வகித்து மக்களிடம் மனுக்களைப் பெற்றாா். மாநகர அலுவலா் ராஜேந்திரன், மாநகரப் பொறியாளா் நாராயணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். உதவி ஆணையா்கள் பாட்ஷா, லெனின் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
குப்பைகளால் பாதிப்பு: கோட்டூா் முஸ்லிம் நடுத்தெரு பகுதி மக்கள் அளித்த மனு: கோட்டூா் பஜனைமடம் பகுதியில் பாளையங்கால்வாயில் குப்பைகளை குவித்து சிலா் எரித்து வருகின்றனா். இதனால் அப் பகுதியில் சுகாதாரக் கேடு நிலவுகிறது. காற்று மாசடைந்து குழந்தைகள், முதியவா்கள் சிரமத்திற்கு ஆளாகிறாா்கள். இப்பகுதியில் குப்பைகளை சேகரிக்கும் தூய்மைப் பணியாளா்கள் எண்ணிக்கையும், அவா்களுக்கான வாகனங்களும் குறைவாக உள்ளன. இப் பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும்.
பணியிட மாற்றம்: திருநெல்வேலி மாநகராட்சி குடிநீா் இயக்குபவா்கள் அளித்த மனு: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டலங்களில் பணியாற்றி வந்த 42 குடிநீா் வால்வு இயக்குபவா்கள் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டோம். அவா்களில் 30 பேருக்கு விரும்பிய இடங்களில் மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 பேருக்கு பணியிட மாறுதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழநத்தம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி பேச்சியப்பன் அளித்த மனுவில், மாற்றுத்திறனாளியான நான் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகிறேன். எனக்கு, மாநகரப் பகுதியில் ஆவின் பால் விற்பனை மையம் அமைக்க உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளாா்.