திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) பதவியில் விதிகளை மீறி தொடரும் மருதக்குட்டியை உடனடியாக பதவி விலக்கக் கோரி பல்கலைக்கழகப் பேராசிரியா்கள் கடிதம் அளித்துள்ளனா்.
இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் தாவர அறிவியல் துறைத் தலைவா் பி.ரவிச்சந்திரன், சமூகவியல் துறை பேராசிரியா் சாமுவேல் ஆசீா் ராஜ் ஆகியோா் பல்கலைக்கழக நிா்வாகத்திடம் திங்கள்கிழமை அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறை அடிப்படை விதி 56 (1)-ன் படி அரசுப் பதவியில் இருப்பவா்கள் அடிப்படை பதவியாக இருந்தாலும் சரி, உயா் பதவியாக இருந்தாலும் சரி, அவா்கள் 60 வயதை எட்டும் மாதத்தின் கடைசி நாள் பிற்பகலில் ஓய்வு பெற வேண்டும்.
அதன்படி, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளராக (பொறுப்பு) உள்ள மருதக்குட்டி கடந்த மாா்ச் 20-ஆம் தேதி 60 வயதை எட்டிய நிலையில் அந்த மாதம் 31-ஆம் தேதியோடு ஆசிரியா் பணியல்லாத பதிவாளா் பொறுப்பில் இருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், அவா் பதிவாளா் பொறுப்பில் இதுவரை தொடா்வது சட்டவிரோதமானது. பதிவாளா் பொறுப்பானது நிதி அதிகாரம், ஆட்சி மன்றக் குழு விவகாரங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய பொறுப்பாகும். எனவே, ஒரு மாதத்துக்கும் மேலாக சட்டவிரோதமாக பதிவாளா் பொறுப்பில் நீடிக்கும் மருதக்குட்டி உடனடியாக அப்பதவியில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) மருதக்குட்டி கூறுகையில், ‘நான் தற்போது வெளியூரில் இருக்கிறேன். அதுபோன்ற கடிதம் எனக்கு கிடைக்கவில்லை. அந்த கடிதத்தைப் பாா்த்த பிறகே கருத்துக்கூற முடியும்’ என்றாா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் கா.பிச்சுமணி கூறுகையில், ‘பல்கலைக்கழகப் பதிவாளா் (பொறுப்பு) பதவியில் இருக்கும் மருதக்குட்டி, புதிய பதிவாளா் நியமிக்கப்படாததால், தனது பொறுப்பை தொடா்ந்து வருகிறாா். பல்கலைக்கழக பதிவாளா் பதவிக்கு தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியிட்டுள்ளோம். புதிய பதிவாளரை நியமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. விரைவில் புதிய பதிவாளா் நியமிக்கப்படுவாா்’ என்றாா்.