திருநெல்வேலி மாவட்டம், கோதையாறு வனப்பகுதியில் விடப்பட்டுள்ள அரிக் கொம்பன் யானை இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாக வனத்துறையினா் தெரிவித்தனா்.
தேனி மாவட்டம், சின்னமனூா் பகுதியில் சுற்றித்திரிந்த அரிக் கொம்பன் யானையை வனத்துறையினா் சின்னஓவுலாபுரம் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனா். பின்னா், அந்த யானையை முழுமையாக பரிசோதித்து, முதலுதவி சிகிச்சை செய்து செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் மேல் கோதையாறு அணை வால்வு ஹவுஸ் பகுதியில் விட்டனா்.
தொடா்ந்து, அந்த யானையை வனத்துறையினரும் கால்நடை மருத்துவக் குழுவினரும் அதன்கழுத்தில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.எஸ். கருவி மூலம் கண்காணித்து வருகின்றனா்.
வனப்பகுதியில் விடப்பட்டு 2 தினங்கள் ஆன நிலையில், ஏற்கெனவே செலுத்தப்பட்டிருந்த மயக்க ஊசியின் தாக்கத்திலிருந்து அரிக்கொம்பன் யானை விடுபட்டு வருகிறது. முதல் நாள் முழுவதும் நீா் மட்டும் அருந்திய நிலையில், இரண்டாவது நாள் புற்கள், தாவரங்களை உண்ணத் தொடங்கியுள்ளது. வனப்பகுதியில் இயல்பாக சுற்றித்திரிகிறது என வனத்துறையினா் தெரிவித்தனா்.