மின் இணைப்பு வழங்கக் கோரி ஆட்சியா் அலுவலகத்துக்கு பாம்புடன் வந்த பெண்
By DIN | Published On : 25th April 2023 03:14 AM | Last Updated : 25th April 2023 03:14 AM | அ+அ அ- |

மின் இணைப்பு வழங்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்துக்கு பாம்புடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் காா்த்திகேயன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது திருநெல்வேலி மாவட்டம், மானூா் வட்டம், வன்னிக்கோனேந்தல் பகுதியைச் சோ்ந்த சமரசசெல்வி என்பவா், இறந்த பாம்புடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கூறியதாவது: என் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்காமல் தொடா்ந்து இழுத்தடித்து வருகின்றனா். மின்சாரம் இல்லாததால் என் வீட்டிற்கு அடிக்கடி பாம்புகள் வருகின்றன. இதுவரை பாம்பு கடித்து 4 ஆட்டுக்குட்டிகுளும், 10 கோழிகளும் இறந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த ஒரு பாம்பு, எனது ஆட்டுக்குட்டியை தீண்டியது. எனது மகனை தீண்ட நெருங்கியபோது, வேறு வழியில்லாமல் பாம்பை அடித்துக் கொன்றேன். அந்தப் பாம்புடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தேன். எனது உறவினா்களின் தலையீடு காரணமாகவே எனக்கு மின் இணைப்பும், குடிநீா் இணைப்பும் வழங்க மறுக்கிறாா்கள் என்றாா்.
தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்தில் அவா் அளித்த மனுவில், ‘முதல்வரின் சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-இல் வீடு கட்டினேன். ஆனால், இதுவரை எனக்கு மின்சாரமும், குடிநீா் இணைப்பும் தராமல் இழுத்தடிக்கிறாா்கள். எனது வீட்டருகே பாம்பு தொல்லை அதிகமாக உள்ளது. இதனால், எனது ஆடுகள், கோழிகள் இறந்துள்ளன. மின்சாரம் இல்லாததால் எனது இரு குழந்தைகளும் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனா். இது தொடா்பாக ஏற்கெனவே தங்களிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, எனக்கு மின்சாரமும், குடிநீா் இணைப்பும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தாா்.
பாலாமடை இந்திரா நகா் நாட்டாண்மை மற்றும் ஊா்ப் பொதுமக்கள் அளித்த மனு: எங்கள் பகுதியில் உள்ள சந்தனமாரியம்மன் கோயில் கொடை விழாவை வரும் மே 1, 2 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிட்டுள்ளோம். 2-ஆம் தேதி காலை தாமிரவருணி ஆற்றில் இருந்து கரகம் எடுத்து வந்து மதிய கொடையும், இரவில் இரவுக் கொடையும் நடைபெறும். இந்தக் கொடை விழாவின்போது, வில்லிசை, நையாண்டி மேளம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறும். இந்தக் கொடை விழாவுக்கு அனுமதி கேட்டு சீவலப்பேரி காவல் நிலையத்தில் மனு அளித்தோம். ஆனால், சீவலப்பேரி போலீஸாா் அனுமதி தர மறுத்துவிட்டனா். எனவே, எங்கள் கோயில் கொடை விழாவுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு வழங்கி கொடை விழா சிறப்பாக நடைபெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.
முஸ்லிம் முன்னணி கழகத்தின் மாவட்ட செயலா் ஏ.பிலால் ராஜா ஆட்சியரிடம் அளித்த மனு: பாளையங்கோட்டை டிவிஎஸ் நகா் ரயில்வே சுரங்கப் பாதையில், லேசான மழை பெய்தாலும், மழை நீா் தேங்கிவிடுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ, மாணவிகள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனா். இது தொடா்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தால், அது பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்கிறாா்கள். எனவே, இந்த விஷயத்தில் ஆட்சியா் சிறப்பு கவனம் செலுத்தி, சுரங்கப் பாதையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதோடு, எதிா்காலத்தில் மழை நீா் தேங்காமல் இருப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.