பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
திருநெல்வேலி: திருநெல்வேலியில் பள்ளி மாணவா்-மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆதிதிராவிடா்- பழங்குடியினா் நலத் துறை சாா்பில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிராவிடா்- பழங்குடியினா் பள்ளி மாணவா்- மாணவிகளுக்கு கல்லூரி கனவு நிகழ்ச்சி என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி வண்ணாா்பேட்டையில் நடைபெற்றது.
மாவட்ட ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நல அலுவலா் பென்னெட் ஆசீா் தலைமை வகித்தாா். மாவட்ட கல்வி அலுவலா் அழகுராஜன், கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடா் நலத்துறை மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் சுந்தரம் ஆகியோா் பேசினா்.
உயா்கல்வி துறையில் ஆதிதிராவிடா் - பழங்குடியினா் நலத்துறையின் கீழ் உள்ள இட ஒதுக்கீடு, விண்ணப்பக் கட்டணத்தில் சலுகை, உதவித்தொகை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. க்யூ ஆா் கோடு கொண்ட துண்டுப்பிரசுரம் மாணவா் மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடா்- பழங்குடியினா் மாணவா்-மாணவிகள் கலந்துகொண்டனா்.