பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையம் சார்பில் பெரியார் தொண்டர் வீ.அ. பழனிக்கு "பெரியார் சிறப்பு விருது', திருநங்கை பிரியாபாபுவுக்கு "பெரியார் விருது', ஆய்வாளர் எஸ்.வி. ராஜதுரையின் நூலுக்கான "பெரியார் பரிசு' ஆகியவை புதன்கிழமை வழங்கப்பட்டன.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் கோ. மீனா இந்த விருதுகளை வழங்கினார். "தொண்டு செய்து பழுத்த பழம்' என்ற தலைப்பில் கவிஞர் புலமைப்பித்தன் பேசினார். பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினர் தங்கம் மூர்த்தி வாழ்த்திப் பேசினார். விழாவில், "செவ்வியல் படைப்புகளில் பகுத்தறிவுச் சிந்தனைகள்', "இளையோர் மேம்பாட்டுக்குப் பெரியார்' ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.
விருது பெறுவோரை பேராசிரியர்கள் கி. ராசா, அ. ஆலிஸ், பா. மதிவாணன் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். பதிவாளர் (பொ) சொ. ஆறுச்சாமி வரவேற்றார். பெரியார் உயராய்வு மையத் தலைவர் இரா. தாமோதரன் நன்றி கூறினார்.
விருது விவரங்கள்:
வீ.அ. பழனி: வயது முதிர்ந்த பெரியார் தொண்டருக்கு வழங்கப்படும் பெரியார் சிறப்பு விருது பெறும் இவருக்கு ரூ. ஒரு லட்சம் ரொக்கம், சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.
பிரியா பாபு: பெரியாரியல் அடிப்படையில் விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கு தொண்டாற்றியதற்காக பெரியார் விருது பெறும் திருநங்கை பிரியா பாபுவுக்கு ரூ. 50 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.
எஸ்.வி. ராஜதுரை: பெரியாரியல் தொடர்பான நூல்- "கலை எனப்படுவது இனக்கொலையென்றால்...' என்ற இவரது நூலுக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம், சான்றிதழ், கேடயம் ஆகியவை வழங்கப்பட்டன.