மணப்பாறையை அடுத்த மலைத்தாதம்பட்டியைச் சேர்ந்தவர் முருகன் மனைவி பழனியம்மாள் (எ) போதும்பொண்ணு (46). கணவரை இழந்த இவர், மணப்பாறையில் சனிக்கிழமை காலை திண்டுக்கல் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு பெண் பழனியம்மாளிடம் பேச்சு கொடுத்து, ஏடிஎம்-ல் பணம் எடுக்க தான் உதவுவதாகக் கூறியுள்ளார்.படிப்பறிவு இல்லாத பழனியம்மாள் அந்த பெண்ணிடம் தனது ஏடிஎம் அட்டையை கொடுத்து ரூ. 1000 எடுத்துத் தருமாறு கூறியுள்ளார். அப்போது அந்த பெண் பழனியம்மாளிடம் ரூ. 500 தாள் இல்லை என்பதால், ரூ. 1000 வரவில்லை என கூறி, ரூ. 2000 எடுத்து கொடுத்துள்ளார்.
அதன்பிறகு பழனியம்மாளின் கவனத்தை திசைதிருப்பி, ரூ. 20 ஆயிரம் மற்றும் ரூ.10 ஆயிரம் என இருமுறை பணத்தை எடுத்துள்ளார். அதன்பிறகு அந்த பெண் அங்கிருந்து சென்ற நிலையில், பழனியம்மாள் தனது வங்கி கணக்கு புத்தகத்தில் வரவு-செலவை பதிவு செய்தபோது, அதில் ரூ. 30 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளதை வங்கிக் காவலர் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், மணப்பாறை காவல் துறையினர் சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.