திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சித்த மருத்துவ பிரிவில் கர்ப்பிணிகளுக்கு அம்மா சஞ்சீவி பெட்டகம் எனும் இலவச சித்த மருந்துகள் வழங்கும் திட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.
இத்திட்டத்தையும், கர்ப்பிணிகளுக்கான சிறப்பு சித்த மருத்துவப் பிரிவையும் தொடக்கி வைத்து ஆட்சியர் கு.ராசாமணி பேசியது: கர்ப்பகாலம் மற்றும் மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் நம் முன்னோர்கள் சித்த மருத்துவத்தில் 11 வகை மூலிகை மருந்துகளை பயன்படுத்தினர். அதை கர்ப்பிணிகளுக்கு இலவசமாக வழங்கும் வகையில் அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதில், முதல், இரண்டாம், மூன்றாம் பருவம் மற்றும் மகப்பேறுக்குப் பிறகு என 4 வகையாகப் பிரிக்கப்பட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன. 11 வகை மூலிகை மருந்துகள் கொண்ட அம்மா மகப்பேறு சஞ்சீவி பெட்டகம்’ஒரு முழுமைபெற்ற மருத்துவப் பொக்கிஷம். இந்த பெட்டகம், அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவ பிரிவுகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் கர்ப்பிணிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இதனை கர்ப்பிணிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் ஆட்சியர்.
விழாவில், அரசு மருத்துவமனை டீன் ஜி. அனிதா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ். காமராஜ் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், கர்ப்பிணிகள் என பலர் கலந்து கொண்டனர்.