துறையூர் திரௌபதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வ. அண்ணாதுரை(50). இவர் இருசக்கர வாகனத்தில் துறையூர் வேங்கடத்தானூர் சாலையில் வெள்ளிக்கிழமை சென்றார். அதே சாலையில் எதிர்புறாக மற்றொரு இருசக்கர வாகனத்தில் நல்லியம்பாளையத்தைச் சேர்ந்த பெ. லட்சுமணன்(27), துறையூர் விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த சு. செல்வராஜ் (52) என்பவரை ஏற்றிச் சென்றார்.
கருப்புக் கோயிலுக்கும் செக்கான் கோயிலுக்கும் இடையே 2 இருசக்கர வாகனங்களும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில் காயமடைந்த அண்ணாதுரை துறையூர் தனியார் மருத்துவமனையிலும், லட்சுமணன், செல்வராஜ் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி செல்வராஜ் உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், துறையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.