மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவாசி மாற்றுரைவரதீசுவரர் கோயிலில் புதன்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவாசியில் மாற்றுரைவரதீசுவரர் கோயில் உள்ளது. பழமையான இந்த கோயிலில் கடந்த 2000-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கும்பாபிஷேகம் நடத்துவதற்கான திருப்பணிகள் அண்மையில் தொடங்கின. இதில், கோயிலில் உள்ள ஈஸ்வரர் சன்னதி, பாலாம்பிகை சன்னதி, விநாயகர் சன்னதி, சுப்பிரமணியர் சன்னதி, பரிவார தெங்வங்களின் விமானங்கள், மூலஸ்தானம், மதில்கள், பிரகாரங்களில் திருப்பணிகள் நடைபெற்றது. இதையடுத்து, கும்பாபிஷேக விழா ஜூன் 8-ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. அன்று மாலையில் புண்யாஹ வாசனம் செய்து ஹோமங்கள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்றது. அதன்பிறகு யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை காலை நான்காம் கால பூஜையும், மாலையில் ஐந்தாம் கால பூஜையும் நடைபெற்றன.
புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஆறாம் கால பூஜையை தொடர்ந்து பூர்ணாஹூதி நடைபெற்றது. அதிகாலை 5.30 மணிக்கு யாத்ரா தானம், கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. பிறகு விநாயகர், சுப்பிரமணியர், அம்பாள், நடராஜர் சன்னதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களின் விமானம், ராஜகோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து காலை 6.45 மணிக்கு மூலஸ்தானத்தில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் சி. கல்யாணி, உதவி ஆணையர் முல்லை, கோயில் தக்கார் ஜெய்கிஷன், செயல் அலுவலர் ரவிச்சந்திரன், கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.