காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை: சிறுவர்கள் உள்பட 10 பேர் கைது
திருச்சி அருகே காதல் விவகாரத்தில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக சிறுவர்கள் உள்பட 10 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்த மேலமேடு இனாம்புலியூர் பகுதியைச் சேர்ந்தவர் வேலுமணி மகன் தேவா (21). விவசாயி. இவர் புதன்கிழமை இரவு தனது தாய் செல்வியுடன் (55) வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டினுள் நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, தேவாவை அரிவாளால் வெட்டினர். இதைத் தடுக்க முயன்ற செல்வியையும், அந்தக் கும்பல் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.
இதில், பலத்த காயமடைந்த தேவா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். செல்வி திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இதில், சந்தேகத்தின் பேரில், கரூர் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு மகனும், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியுமான ஜெயகாந்தன் (20), தாயனூர் முருகேசன் மகன் ராஜேஷ் (எ) குட்டி (19), பள்ளக்காடு காத்தான் மகன் ரஞ்சித் (19) ஆகிய மூவரையும் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், சோமரசம்பேட்டை தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வரும் தேவாவின் மாமன் மகளை, ஜெயகாந்தன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை தேவா கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களது காதல் தொடர்ந்ததால் கோபமடைந்த தேவா, ஜெயகாந்தன் வீட்டுக்கே சென்று தகராறு செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த ஜெயகாந்தன், தனது நண்பர்கள் ராஜேஷ், ரஞ்சித், கீழக்கல்படப்டு மனோகர் மகன் ராஜ்குமார் (18), பள்ளக்காடு குமார் மகன் மனோஜ் (18), போச்சம்பள்ளி பாக்யராஜ் (29), 17 வயது சிறுவர்கள் இருவர், எட்டரை செல்வம் மகன் சத்யராஜ் (27), தாயனூர் தனபால் (19) ஆகிய 10 பேரும் சேர்ந்து, தேவாவை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சோமரசம்பேட்டை போலீஸார் மேற்கண்ட 10 பேரையும் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.