திருச்சி கம்பரசம்பேட்டை கோ சாலையில் பராமரிக்கப்பட்டு வரும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 46 பசுக்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கோசாலை வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என். நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ். வளர்மதி ஆகியோர் மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் பசுக்களை வழங்கினர்.
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு பக்தர்களால் நன்கொடையாக அளிக்கப்படும் பசுக்கள் கோயிலின் திருக்கொட்டார கோசாலையிலும், கம்பரசம்பேட்டை கோ சாலையிலும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், திருச்சி மண்டலத்திலுள்ள கோயில்களில் பராமரிக்க இயலாத நிலையில் உள்ள கால்நடைகளும் கம்பரசம்பேட்டையில் உள்ள கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், கோயிலின் பயன்பாட்டுக்குத் தவிர, ஏனைய உபரி கால்நடைகள் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 363 பசுக்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கப்பட்ட நிலையில், சனிக்கிழமை மேலும் 46 பசுக்கள் வழங்கப்பட்டன. மகளிர் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தோர் தேர்வு செய்யப்பட்டு இவை வழங்கப்பட்டு வருகின்றன என மாவட்ட நிர்வாக வட்டாரம் தெரிவித்தது.
நிகழ்ச்சியில், மக்களவை உறுப்பினர் ப. குமார், ஒன்றியக் குழு முன்னாள் தலைவர்கள் அழகேசன், எஸ்.பி. முத்துக்கருப்பன், உதவி மகளிர் திட்ட அலுவலர் காமராஜர், ஸ்ரீரங்கம் கோயில் உதவி ஆணையர் ரத்தினவேல், கண்காணிப்பாளர் எம்.எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.