திருச்சியில் இருவேறு சம்பவங்களில் தண்டவாளத்தில் இருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.
திருச்சி தென்னூர் ரயில்வே மேம்பாலம் அருகே அமைந்துள்ளது குப்பாங்குளம். இப்பகுதியைச் சேர்ந்தவர் ச. மகேஸ்வரன் (35). ஆட்டோ ஓட்டுநர். இவர் அவ்வப்போது போதைப்பொருட்கள் விற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் மகேஸ்வரன், புதன்கிழமை காலை தென்னூர் ரயில்வே மேம்பாலப் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் சடலமாகக் கிடந்தார். தகவலின் பேரில் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இறந்துபோன மகேஸ்வரனுக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.
திருவெறும்பூர் அருகே மேலும் ஒருவர் சாவு : திருவெறும்பூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பகவதிபுரத்தைச் சேர்ந்த அ.சீனிவாசன் (30) என்பவர் பலத்த காயங்களுடன் மயங்கி கிடந்தார்.
அவரை அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை காலை இறந்தார்.
இதேபோல், திருவெறும்பூர் அருகே உள்ள ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை காலை ஆலத்தூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மணிகண்டன் தண்டவாளத்தில் இறந்து கிடந்ததும் குறிப்பிடத்தக்கது.