திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகாநகரைச் சேர்ந்தவரும், தில்லைநகரில் மருந்தகம் நடத்தி வருபவருமான முருகப்பாண்டியன், இவரது மனைவி பொற்கொடி ஆகியோர் கடந்த 2013-ல், திருச்சி உறையூர் சாலைரோட்டைச் சேர்ந்த ராமசாமி மகன் ரவிச்சந்திரனை மருந்தகத்தில் பங்குதாரராகச் சேர்த்துக் கொள்வதாகக் கூறிபல தவணைகளாக ரூ.30 லட்சத்தை அவரிடம் பெற்றனராம்.
ஆனால், உரிய காலம் கடந்தும் மருந்தகத்தில் அவரை பங்குதாரராகச் சேர்க்காமலும், பணத்தைத் திருப்பித் தராமலும் தம்பதி ஏமாற்றி வந்தனர். இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தம்பதி மீது வழக்குப்பதிய மாநகரக் குற்றப் பிரிவுக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸார் இருவர் மீதும் வழக்குப்பதிந்து, முருகப்பாண்டியனை திங்கள்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.